Friday 27 January 2012

அறுந்த வாலுவின் கதை !

நானே ப்ளாக் எழுதுறத விட்டுடலாம்னு பார்த்தா கூட ட்விட்டர்ல உள்ள மக்கள் ரொம்ப ஆர்வமா அடுத்த பதிவு எப்ப வெளியுடுரீங்கனு ரொம்ப ஆர்வமா கேட்குறாங்க. அப்படி ஆர்வமா கேட்ட மக்களுக்காக நான் ப்ளாக் எழுத வேண்டிய நிலைமை .மறுபடியும் என்னோட கதைக்கே போவோம் .

 நான் இப்பவே இவ்ளோ வாலா இருக்கேன்னா ? அப்போ எவ்ளோ பெரிய வாலா இருந்துப்பேன்னு பார்த்துக்கோங்க . யார்ப் பேச்சையுமே கேட்க மாட்டேன் அப்புடியே ஜாலியா இருப்பேன் . வீட்ல உள்ளப் பொருளை எல்லாம் உடைச்சுட்டு அப்புடியே நல்லப் பிள்ளை மாதிரி உட்கார்ந்துக்குவேன். எப்புடி இருந்தாலும் எங்கம்மா கண்டுப் பிடிச்சுடுவாங்க .சில சமயம் என் தம்பி தங்கச்சி உடைக்கிரதியும் நான் தான் உடைச்சேன்னு நெனச்சு அடிப்பாங்க. என்னப் பண்றது பெரியவா வாழ்க்கைல இதெல்லாம் சகஜம் தானே .

சுட்டியா இருந்தாலும் படிப்புல கெட்டி நான். சில சமயம் என்னோட விளையாட்டுத் தனத்தால மார்க் குறைஞ்சுடும்.எப்பவும் அம்மாட்ட தான் ரேங்க் கார்ட்ல சைன் வாங்குவேன் ... மார்க் குறையும் போது மட்டும் எனக்கு அதிகம் செல்லம் கொடுக்குற அப்பாட்ட சைன் வாங்கிடுவேன் . எப்புடியும் அம்மாவுக்கு தெரிஞ்சுப் போய்டும் . ரெண்டுப் பேரும் நல்லா திட்டு வாங்குவோம் அம்மாட்ட .

அம்மா திட்டுவாங்க , அடிப்பாங்கான்றதால அவங்களுக்கு மட்டும் கொஞ்சம் பயப்படும் எனக்கு வீட்ல பாக்கெட் மணியே கொடுக்க மாட்டாங்க ...ஸ்நாக்ஸ்லாம் வீட்ல இருந்தே கொடுத்து அனுப்பிடுவாங்க. எனக்கோ கான்டீன்ல விற்கிரத வாங்கி சாப்பிடறதுல தான் ஆசை ... வேற வழி ? ... வீட்ல இருந்து காசை ஆட்டேப் போட்ருவேன்.காசை எடுத்தியான்னு அம்மா கேட்டா எடுக்கவே இல்லன்னு சாமி மேலேயே பொய் சத்தியம் பண்ணுவேன் . பொய் சத்தியம் பண்ணுனா அது பண்ணும் இது பண்ணும்னு அம்மா என் காதுல விழுற மாதிரி யார்ட்டயாது சொல்லி எனக்கு பீதியக் கெளப்புவாங்க . அப்புறம் என்ன ... தனியா போய் சாமிக்கிட்ட இது தான் கடைசி முறை இனிமே சத்தியமா இப்புடி பொய் சத்தியம் பண்ண மாட்டேன்னு சொல்லி மன்னிப்புக் கேட்பேன். அப்புறம் எப்பவும் போல தான் ...

எனக்கு சின்ன வயசுலேயே நாம மட்டும் தான் ஜெயிக்கணும் , நம்ம பேச்ச மட்டும் தான் எல்லாரும் கேட்கனும் என்ற உயரிய கொள்கை இருந்துச்சு . விளையாட்டுல கூட யாரும் ஜெயிக்கக் கூடாது , ஜெயிச்சவுங்கள போட்டு அடி வெளுத்துப்புடுவேன்.இதுனாலேயே என்னைய யாரும் விளையாட்டுக்கு சேர்த்துக்க மாட்டாங்க . அப்புறம் எதாவுது பேசி சரி பண்ணிடுவேன் .என்ட்ட அடிவாங்குனவுங்க அவுங்க அம்மாவ கூட்டிட்டு வந்து எங்கம்மாட்ட நியாயம் கேட்ப்பாங்க.எங்கம்மா என்ன பண்ணுவாங்க ??? வழக்கம் போல அடிப்பாங்க என்னை . அதுகெல்லாம் அசர்ர ஆளா நான் .

நான் ஒரு நான் வெஜ் பிரியை சின்னதுல இருந்தே .ஒரு நாள் எங்கம்மா சிக்கன் கிரேவி வச்சுட்டு கொஞ்சம் நேரம் கழிச்சு சாப்பிடுவோம்னு போய் கண் அசந்துட்டாங்க .எங்க வீட்ல வேற காரச்சாரமா சமைப்பாங்க ...  சின்னப் பிள்ளைன்றதால அப்ப அது கொஞ்சம் கஷ்ட்டமா இருந்துச்சு .அதுனால சிக்கன் பீசை எடுத்து குடிக்க வச்சுருந்த ஜலத்துல அலம்பி அப்புடியே வாய்ல போட்டுக்கிட்டேன் . இப்புடியே எல்லா சிக்கன் பீசையும் காலிப் பண்ணி , மொத்த கிரேவியையும் தண்ணில கழுவியாச்சு. அப்புறம் வழக்கம் போல விளையாட கெளம்பிட்டேன் .

அன்னைக்குன்னு பார்த்து ஒரு பையன வேற அடிச்சு , அவன் நெத்தில காப்பித் தூள் வச்சு அனுப்பி இருந்தேன் . அவுங்க அம்மாவோட வந்து அந்த பையன் நியாயம் கேட்ருக்கான். எங்கம்மாவுக்கு என் மேல சரியான கோபம் .என்னை  தர தரன்னு இழுத்துக்கிட்டு வந்து "காலைல இருந்து இன்னும் குளிக்கக் கூட இல்ல , ரவுடியாட்டம் அலைஞ்சுக்கிட்டு ஊர் வம்ப வேற இழுத்துட்டு வர்றியானு " கேட்டுட்டு இருந்தப்ப தான் தண்ணியப் பார்த்தாங்க... அப்புறம்  என்ன ??? அந்த சிக்கன் கிரேவி கலந்த  தண்ணிலேயே குளிப்பாட்டி விட்டுட்டாங்க... அதுக்கப்புறம் கொஞ்சம் சேட்டை எல்லாம் குறைத்துக் கிட்டேன் .இது மாதிரி நெறைய சோதனைகளை தாண்டி வந்துருக்கேன் நான் :(